தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதால் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
சனி, ஞாயிறு மற்றும் சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால் ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில், ஆம்னி பேருந்து கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது 2,300 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
அதேபோல, சென்னையில் இருந்து கோயம்புத்தூர் செல்ல அதிகபட்சமாக 1,000 ரூபாய் வசூல் செய்யப்பட்ட வந்த நிலையில், தற்பொழுது 3,000 ரூபாய் வரை அதிக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில், தீபாவளி, பொங்கல் பண்டிகளை நாட்களைப் போலவே சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி போன்ற தொடர் விடுமுறை நாட்களிலும் தலைநகர் சென்னைில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரசு சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டிய அவசியம் உள்ளது.
இதன் மூலம் ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்கவும் வழிபிறக்கும் என்றும், எனவே இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
-ம.பவித்ரா








