சென்னையில் பரந்தூரில் அமையவுள்ள இரண்டாவது விமான நிலையம் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் குறித்தும் பார்க்கலாம்.
சென்னையில் மீனம்பாக்கம்-திரிசூலத்தில் தற்போது செயல்பாட்டில் உள்ள சென்னை உள்நாட்டு, மற்றும் பன்னாட்டு விமான நிலையமானது, ஆண்டு ஒன்றிற்கு 1 கோடியே 60 லட்சம் விமான பயணிகளை கையாளும் திறன் கொண்டது. ஆனால் கடந்த ஆண்டு மட்டும் 2 கோடியே 20 லட்சம் விமான பயணிகளை கையாண்டு சாதனை படைத்தது. பல ஆண்டுகளாக சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையம் வேண்டும் என பேசப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதிதாக விமான நிலையம் அமைக்க, சென்னைக்கு அருகே 4 இடங்களை தமிழக அரசு தேர்வு செய்து விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கொடுத்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், படாளம் மற்றும் பரந்தூர், திருவள்ளுவர் மாவட்டத்தில் உள்ள பன்னூர் ஆகிய இடங்கள் தமிழ்நாடு அரசால் அடையாளம் காணப்பட்டது.
இது குறித்து சென்ற வாரம் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவும், தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும் ஆலோசனை நடத்தினர். தமிழ்நாடு மற்றும் மத்திய அரசின் தொழில் நுட்ப குழுவால் பல கட்ட ஆய்வுகளை நடத்தினர்.
நிறைவாக காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், வாலாஜாபாத் வட்டத்தில் அமைந்துள்ள பரந்தூரில் 2-வது சென்னை பன்னாட்டு விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் வி.கே.சிங் மாநிலங்களவையில் அறிவித்தார்.
விமான நிலையம் அமையவுள்ள பரந்தூரில் 4,791 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த இடம் சென்னை விமான நிலையத்திலிருந்து 75 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. புதிய விமான நிலையத்திற்கு தற்போதைய விமான நிலையத்திலிருந்து பயணிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். மொத்த நிலத்தில் 50 சதவீத இடம் மாநில அரசினுடையது, மீதமுள்ள 50 சதவீத இடத்தை கையகப்படுத்த வேண்டும்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து, பரந்தூருக்கு செல்ல 70 கி.மீ தூரம் ஆகும். 4,791 ஏக்கரில் அமைய உள்ள விமான நிலையத்திற்கு கூடுதலாக 200 ஏக்கர நிலம், தென் மேற்கு பகுதியில் தேவைப்படுகிறது. விமான நிலைய ஓடுதளம்/ரன்வே இங்கு தான் அமைக்கப்படவுள்ளது.
அம்பத்தூரில் இருந்து பரந்தூருக்கு 60 கி.மீ. தூரமாகும். இதற்கு 1 மணி நேரம் 40 நிமிடங்கள் ஆகும். திருவொற்றியூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் உள்ள பரந்தூரை அடைய 2 மணி நேரம் 55 நிமிடங்களாகும். அது போல் எழும்பூரிலிருந்து 53 கி.மீ. தூரமும், 1 மணி நேரம் 55 நிமிடங்களும். சோழிங்கநல்லூரிலிருந்து 60 கி.மீ. தூரமும் 1 மணி நேரம் 45 நிமிடங்களும், தாம்பரத்திலிருந்து 73 கி.மீ. தூரத்திலும் , 1 மணி நேரம் 54 நிமிடங்களும் பயண நேரம் ஆகும்.
பரந்தூரில் 2 விமான ஓடுதளங்கள் அமைக்கப்படும். சுமார் 1500 கோடி மதிப்பீட்டில் புதிய விமான நிலையம் அமைய உள்ளது. சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து 12 கி.மீ. தூரத்தில் இந்த விமான நிலையம் அமையவுள்ளது.
தமிழ்நாடு அரசு பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, முதலில் தடையில்லா சான்றிதழை, விமான நிலைய அதிகாரிகளிடம் வழங்கும். அடுத்த கட்டமாக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும்.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் நிறைந்து காணப்படுவதால், பல ஆண்டுகளாக புதிய விமான நிலையம் அமைக்கப்படுவது தாமதமானது. தொலை தூரமாக இருந்தாலும் பரந்தூர் விமான நிலையம் கிரின் பீல்டு விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல வகைகளில் பயனுள்ளதாக இருக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக உள்ளது