ஜப்பானில் கடும் பனிப்பொழிவு – 30 பேர் உயிரிழப்பு!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. ஜப்பானின் அமோர் நகரில் 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பனிப்பொழிந்து, 2 மீட்டர் உயரத்துக்கு பனி கட்டிகள் படிந்துள்ளது. வடக்கு ஜப்பானின் ஹொக்கைடோ நகரத்தில் இருந்து சப்போரா வரை சாலைகளில் படிந்துள்ள பனியை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் ஊழியர்களுடன் ராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

பனிப்பொழிவால் ஹொக்கைடோவின் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ரயில் சேவைகளும் தாமதமாகியுள்ள நிலையில் முக்கிய சாலைகளில் பனி படர்ந்துள்ளதால் தரை வழிப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. ஜப்பானில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பனிப்பொழிவு மற்றும் அது தொடர்பான நிகழ்வுகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பனிகளை அகற்றும்போது பனிக்கட்டிகள் விழுந்து சிலர் படுகாயம் அடைந்துள்ளனர். கூரைகளில் இருந்து விழும் பனிக்கட்டிகளாலும் மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களில் 30 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 290க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.