வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் 22 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாட்களில், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்கில் 26 அக்டோபர் முதல் வடகிழக்கு பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் எதிர்வரும் 26 அக்டோபர் ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பேரிடர் மீடப்பு பணிகள் துறையின் சார்பாக, பருவமழை & பேரிடர்களின் போது பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் தொடர்புகொள்ள வேண்டிய எண்கள், வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடுகளை தலைமைச்செயலகத்தில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
“வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம். வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தல்படி கனமழை பெய்யக்கூடிய இடங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழக்கும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னையில் வெள்ளம் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, மாநகராட்சியுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.” என்றும் தெரிவித்துள்ளார்.