#HBDRajini – தமிழகமெங்கும் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டம்!

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு நள்ளிரவில்…

நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் அவரது ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லம் முன்பு நள்ளிரவில் ரசிகர்கள் திரண்டனர். ரஜினியை வாழ்த்தி கோஷமிட்ட ரசிகர்கள், கேக் வெட்டி ரஜினிகாந்தின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர்.

ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, மேற்கு மாம்பலம் ஸ்ரீ சங்கர மடத்தின் கோசாலையில், 108 கோ பூஜை நடைபெற்றது. ரஜினி மக்கள் மன்றத்தின், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ரவிசந்திரன் சார்பில், பூஜை நடத்தப்பட்டது. ரஜினிகாந்த் பூரண நலத்துடன் வாழ வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் பேசிய ரவிசந்திரன், 2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று கோட்டையில் ரஜினி கொடி ஏற்றுவார் என கூறினார்.

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் நடிகர் ரஜினியின் கட்சி வெற்றி பெற வேண்டி, தொகுதிக்கு ஒரு தேங்காய் வீதம் மொத்தம் 234 தேங்காய்களை, மதுரை திருப்பரங்குன்றம் கோயில் முன்பு, உடைத்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தொடர்ந்து ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட துணைச் செயலாளர் அழகர்சாமி தலைமையில் கோயிலில் நடைபெற்ற வழிபாடுகளில் கலந்து கொண்ட ரசிகர்கள், சுப்பிரமணிய சுவாமிக்கு எலுமிச்சை, வடைகள் உள்ளிட்ட மாலைகளை அணிவித்தனர்.

சென்னையை அடுத்த திருவொற்றியூர்- எண்ணூர் விரைவுச்சாலையில் உள்ள ஸ்ரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் ரஜினிகாந்த் பூரண உடல்நலத்துடன் வாழ வேண்டி ஆயுஷ்மான் யாக பூஜைகள் நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற வேண்டி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் பெண்கள் வழிபாடு செய்தனர்.

ஸ்ரீரங்கத்தை அடுத்த பிருந்தாவனம் ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் திருச்சி மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன்,நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இதைத் தொடர்ந்து, ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பக்தர்கள் மற்றும் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி புதுக்கொட்டை அருகே லேணா விளக்கு பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள ஏழை மாணவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கல்வி உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ரஜினி மக்கள் மன்ற மாவட்ட அமைப்பாளர் கே.கே.முருகுபாண்டியன் இலவச புத்தகம் உள்ளிட்ட 10 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply