திருமணத்திற்கு தயாராகும் ஹரிஷ் கல்யாண்

‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ போன்ற பல படங்களில் பிசியாக நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண்…

‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ போன்ற பல படங்களில் பிசியாக நடித்துவரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண் ‘சிந்து சமவெளி’ படம் மூலம் அறிமுகமானார். பின் சில படங்களில் நடித்துவந்த இவர் பிக்பாஸ் சீசன் 1ல் போட்டியாளராகக் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பின் இவர் நடிப்பில் வெளிவந்த ‘ப்யார் ப்ரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’ ‘தாராள பிரபு’ உள்ளிட்ட படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இவரைப் பிரபலமடையச் செய்தது. கடைசியாக ‘ஓ மணப்பெண்ணே’ படத்தில் நடித்திருந்தார். மேலும் ‘நூறு கோடி வானவில்’, ‘டீசல்’ போன்ற படங்களில் நடித்துவருகிறர்.

இப்படி பிசியாக பல படங்களில் நடித்துவரும் ஹரிஷ் கல்யாண்  தனது திருமணம் குறித்த அறிவிப்போடு தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படத்தை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அந்த அறிவிப்புடன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அன்புள்ள அனைவருக்கும், என்னுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே எந்த நிபந்தனைகளும் அற்ற அன்பையும் பாசத்தையும் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கும் அதிரஷ்டம் எனக்குக் கிடைத்தது.

என்னுடைய ஒவ்வொரு சிறிய கனவையும் என் பெற்றோர் ஊக்குவித்தார்கள். அதுபோலவே இப்போது நீங்கள் அனைவரும் எனக்கு மிகவும் அன்பையும் ஆதரவையும் காட்டி வருகிறீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் சினிமா உலகில் எனது சிறு சிறு வெற்றிகளைப் பதிக்க உதவியவர்கள், ஒவ்வொரு வெற்றியையும் மைல்கல்லையும் உங்களுடன் பகிர்ந்துகொள்வது எனது பயணத்தின் மிகவும் திருப்திகரமான பகுதியாகும்.

இப்போது மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடன், எனது தனிப்பட்ட வாழ்க்கையில் துவங்க உள்ள முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். எங்கள் பெற்றோர்கள் குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள், அன்பான ரசிகர்கள், ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் எனது நலம் விரும்பிகள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கும் நேரத்தில், இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசீர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.