கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் – முதன்மை கல்வி அதிகாரி தகவல்!

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்தார். தென்காசி மாவட்டத்தில், கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் தொடர் கனமழை…

தென்காசி மாவட்டத்தில் கனமழையால் விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் நாளை முதல் நடைபெறும் என மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தகவல் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில், கடந்த 18, 19 ஆகிய தேதிகளில் தொடர் கனமழை பெய்தது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 18, 19, 20 ஆகிய தேதிகளில் பள்ளிகளுக்கு  அம்மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், அன்றைய தினம் நடைபெற இருந்த அரையாண்டு தேர்வுகள் வேறொரு தேதியில் நடத்தப்படும் எனவும், அதேபோல் 21, 22-ம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு அதுவும் மற்றொரு தேதியில் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள் : ரிலீசுக்கு முன்பே கோடி கணக்கில் கல்லா கட்டிய ‘விடாமுயற்சி’…? – லேட்டஸ்ட் அப்டேட்!… 

தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை தினத்தை முடிந்து இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், விடுபட்ட அரையாண்டு தேர்வுகள் தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் நாளை முதல் நடத்தப்படும் எனவும் தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 18-ம் தேதி நடைபெற இருந்த கணிதத் தேர்வு-நாளை 3-ம் தேதியும், 20-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 4-ம் தேதியும், 21-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 5-ம் தேதியும், 22-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு 8-ம் தேதியும் நடைபெறும் எனவும் தென்காசி மாவட்ட கல்வி அதிகாரி முத்தையா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.