குஜராத் தொங்கு பாலம் அறுந்து விபத்து; 100க்கும் மேற்பட்டோர் பலி

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்தள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.…

குஜராத் மாநிலம் மோர்பி தொங்கு பாலம் அறுந்து விழுந்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்தள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தில் புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்களும், மாநில பேரிடர் மீட்புப்படையினரும் உடனடியாக விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்க பட்டதாகவும் அமைச்சர் பிரிஜேஷ் மெர்ஜா தெரிவித்தார். ஆற்றில் விழுந்த சிலர் அங்கிருந்த வயரை பிடித்தபடி உயிர் பிழைத்ததாகவும், அளவுக்கு அதிகமான கூட்டம் கூடியதே விபத்துக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்தார்.

பாலம் அறுந்தபோது சுமார் 100க்கும் மேற்பட்டோர் பாலத்தில் இருந்ததாகவும், ஆற்றில் விழுந்தவர்களில் 177 பேர் வரை மீட்கப்பட்டு விட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் குஜராத் மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த விபத்து பற்றி பிரதமர் மோடி, குஜராத் மாநில முதலமைச்சர் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு நிலைமையை கேட்டறிந்தார். மீட்புப்பணிக்கு குழுக்களை அவசரமாக திரட்டுமாறு அவர் கேட்டுக்கொண்டார். நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் அளிக்குமாறும் வலியுறுத்தினார். குஜராத்தில் முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, சம்பவ இடத்தை நேரில் பார்வையிட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பூபேந்திர படேலை தொடர்பு கொண்டு பேசினார். பலியானோர் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சம்பவத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு குஜராத் அரசு சார்பில் தலா ரூ.4 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் பூபேந்திர படேல் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.