ஈரோட்டில் வாகனத்தில் கடத்தி வரப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பெருந்துறையை அடுத்த விஜயமங்களம் சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியிலிருந்து, வேனுக்கு பார்சல்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருந்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களிடம் விசாரித்துள்ளனர். அப்போது லாரியிலிருந்த இருவர் பார்சல் குறித்து குழப்பமாக பதில் அளித்துள்ளனர்.
பின்னர், போலீசார் பார்சல்களை பிரித்து சோதனை செய்தபோது, அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருப்பூருக்கு குட்கா பொருட்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர், கடத்தி வரப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.







