தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்துள்ள நிலையில், மளிகை பொருள்கள் விலையும் அதிகரித்துள்ளது.
கடந்த இரு வாரமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.130-வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் சென்னையில் நேற்று முதல் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. விரைவில் தமிழ்நாடு முழுவதும் ரேசன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மளிகை பொருள்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது. கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை வளாகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்கள் வழக்கமான விற்பனை விலையிலிருந்து 5 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
துவரம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகள் ரூ.20 முதல் ரூ.40 வரை உயா்ந்துள்ளது. 26 கிலோ சாதா பொன்னி அரிசி மூட்டை, ரூ.1,050 ஆகவும், நடுத்தர பொன்னி அரிசி ரூ.1,250-இல் இருந்து ரூ.1500-ஆக அதிகரித்துள்ளது. இதேபோல் ரூ.119-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.150-க்கும், ரூ.112-க்கு விற்கப்பட்ட உளுத்தம்பருப்பு ரூ.124-க்கும், ரூ.61-க்கு விற்கப்பட்ட கடலைப்பருப்பு ரூ.66-க்கும், ரூ.91-க்கு விற்பனையான சிறுபருப்பு ரூ.102-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சீரகம் கடுமையாக விலை உயர்ந்துள்ளது. ரூ.300-க்கு விற்கப்பட்ட சீரகம் தற்போது ரூ.680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் மிளகு, வெந்தயம், கடுகு, புளி, பூண்டு உள்ளிட்டவற்றின் விலையும் உயர்ந்துள்ளது.
விளைச்சல் குறைவால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் மளிகை பொருள்கள் குறைந்தால் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.