தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த மாதம் 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி வழங்கிட மத்திய அரசு அனுமதியளித்தது. அதன் முதற்கட்டமாக மருத்துவர்கள், சுகாராப் பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை தமிழகத்தில் 1.12 லட்சம் பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்கள் கொரோனா தடுப்பூசிக்காக கோவின் செயலியில் பதிவு செய்திருந்த நிலையில், 150க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்ட தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் அனுமதியை சுகாதாரத்துறை வழங்கியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதன்படி, சென்னை, கோவை, மதுரை, திருச்சி உட்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 195 மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி வழங்கும் உரிமையை தமிழக சுகாதாரத் துறை அளித்திருக்கிறது. இதுதொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படி தடுப்பூசிகளை வழங்கிட வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனுமதி பெற்ற மருத்துவமனைகளில் தடுப்பூசிகளை 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சேமித்து வைப்பதற்கான கட்டமைப்புகள் மற்றும் தடுப்பூசி வழங்கிட பயிற்சி பெற்ற ஐந்து பேர் கொண்ட குழுவினர் தயார் நிலையில் இருப்பதை சம்பந்தப்பட்ட சுகாதார மாவட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது வரை 340 இடங்களில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், இனி கூடுதலாக 150 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.