மேற்கு வங்கத்தில் கவர்னருக்கும், முதல்வருக்கும் மோதல் போக்கு இருந்துவந்த நிலையில் இன்று முதல் அம்மாநில சட்டமன்றத்தை கவர்னர் ஜக்தீப் தன்கர் முடக்கியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சி நடந்துவருகிறது. இந்த மாநிலத்தில் ஜக்தீப் தன்கர் ஆளுநராக உள்ளார். அம்மாநில முதல்வருக்கும், ஆளுநருக்கும் சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. சமீபத்தில் மேற்கு வங்க எம்.பி சுகேந்து சேகர் ரே நாடாளுமன்றத்தில் ஆளுநர் ஜக்திப் தன்கர், மாநில உரிமைகளில் தலையிடுவதாகவும் அதனால் அவரை அப்பதவியிலிருந்து நீக்குமாறும் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை வைத்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் சட்டசபை கூட்டத்தொடர் விரைவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அம்மாநில சட்டமன்றத்தை இன்று முதல் முடக்குவதாக ஆளுநர் ஜக்தீப் தன்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, அரசியலமைப்பு சட்டத்தின் 174 பிரிவு(2) மற்றும் உட்பிரிவு (a)ன் கீழ், மேற்கு வங்கத்தின் ஆளுநர் ஜக்தீப் தன்கர் ஆகிய நான் 12/02/2022 முதல் மாநில சட்டமன்றத்தை முடக்குகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் ஜக்தீப் தன்கரை பதவி நீக்கம் செய்யவேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் கொல்கத்தா உயர்நீதிம்னறத்தில் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.