ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணையமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி மாநில அரசின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.1,400 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என்றும், வேலைவாய்ப்பை அதிகரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஏற்கனவே 400 பேருக்கு காவல் துறையில் வேலை கொடுக்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
புதுச்சேரியில் அனைத்து வீடுகளிலும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்ற அவர், மீனவர்களை கைது செய்வது வாடிக்கையாகின்றது. அதே நேரம் அவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றோம். மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், “ஆளுநர்கள் இந்திய அரசியலைமைக்குட்பட்டு செயல்படுகிறார். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது என்று எப்படி சொல்ல முடியும்? ஆளுநர்கள் திமுகவின் கைப்பாவையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதனால் ஆளுநரை மாற்றிவிட்டு அவர்களுக்கு ஏற்றவர்களை ஆளுநராக நியமிக்க வேண்டும் எனக் கேட்பது நடக்காது ஒன்று” என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தில் திமுக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு ஆளுநர் கேள்வி கேட்கின்றார், ஆனால் அதற்காக அவரை மாற்ற வேண்டும் என்று கேட்பதா என கேள்வியெழுப்பிய எல்.முருகன், புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இணைந்து பணியாற்றுகின்றார்கள் என்றார். மேலும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார், இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தான் உரிய முடிவெடுக்கும் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.