இலங்கை, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 87 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், விலையுர்ந்த நவரத்தின கற்களை பறிமுதல் செய்து, இலங்கை வாலிபர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்க இலாகா அதிகாரிகள் விமானப் பயணிகளை கண்காணித்தனர். அப்போது, துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிகேணியைச் சேர்ந்த ரகீம் (30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32) ஆகியோரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்துச் சென்று சோதனை செய்தனர். அப்போது, 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததைக் கண்டுபிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 59 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கமும், ரூ. 4 லட்சத்து 86 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார்.
அதேபோல, இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த இலங்கை நாட்டைச் சேர்ந்த தங்கராஜா (37) என்பவரை நிறுத்தி விசாரித்தனர். அவரது உடமைகளில் எதுவும் இல்லாததால் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் விலையுர்ந்த நவரத்தின கற்கள் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 23 லட்சத்து 13 ஆயிரம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலையுர்ந்த கற்களை கைப்பற்றினார்கள்.
விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் ரூ. 87 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், 1,706 கேரட் விலையுர்ந்த கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-ம.பவித்ரா








