தங்கள் கட்சியைச் சேர்ந்த 2 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோவா காங்கிரஸ், அம்மாநில சபாநாயகரிடம் மனு அளித்துள்ளது.
கோவாவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக ஆட்சியை கைப்பற்றியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
காங்கிரஸ் 11 தொகுதிகளை கைப்பற்றியது. பிற கட்சிகள் எஞ்சிய இடங்களை கைப்பற்றின.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கோவா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மைக்கேல் லோபோ மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் ஆகியோர் தலைமையில் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதைத் தடுக்கும் நோக்கில் காங்கிரஸ் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து மைக்கேல் லோபோவை காங்கிரஸ் கட்சி நேற்று நீக்கியது.
இந்நிலையில், மைக்கேல் லோபோ மற்றும் திகம்பர் காமத் ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டதாக அவர்களே அறிவித்துவிட்டதால், அவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோவா சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ் தவாத்கரிடம் காங்கிரஸ் கட்சி மனு அளித்துள்ளது.
கோவா காங்கிரஸ் கமிட்ட தலைவர் அமித் பட்கர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கும் வேலையை பாஜக ஏற்கனவே கர்நாடகாவிலும், மத்தியப் பிரதேசத்திலும் செய்திருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
கோவாவில் ஏற்கனவே காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்திருக்கிறது என்றும், தற்போது அவர்களின் வலிமையை பெருக்கிக் கொள்ளும் நோக்கில் காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்கப் பார்க்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
காங்கிரசின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள முதலமைச்சர் பிரமோத் சாவந்த், தங்கள் ஆட்சிக்கு யாரும் தேவையில்லை என தெரிவித்துள்ளார். 25 எல்ஏக்களுடன் நிலையான ஆட்சி தற்போது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேண்டும் என்றே மற்றவர்களை குறைகூறுவதையே காங்கிரஸ் கட்சி வாடிக்கையாகக் கொண்டிரு்பபதாகவும் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.