மின் கட்டண உயர்வு அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மின்சார வாரியம் கடும் நிதிச் சுமையில் உள்ளது . அதனால் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க மின்சார வாரியம் முடிவு செய்து அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் வெளியிட்டு இருந்தது. மின் கட்டண உயர்வு குறித்து பொதுமக்கள் கருத்துகளை ஆகஸ்ட் 22- ஆம் தேதி வரை கூறலாம் என்று தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை , கோயம்புத்தூர், மதுரை ஆகிய மூன்று மாநகரங்களில் பொது மக்களும், சிறு , குறு தொழில் நிறுவனங்களும், பல்வேறு அரசியில் கட்சிகளும், பொதுநல அமைப்புகளும், தங்கள் கருத்துகளை மின் கட்டண உயர்வு கூடாது என்று எதிர்த்துப் பதிவு செய்துள்ளார்கள். கருத்துக் கேட்பு என்பது மாவட்டம்தோறும் இருக்க வேண்டும் . மூன்று மாவட்டங்களோடு மட்டுமே முடிந்துவிடக் கூடாது . அனைவரின் கருத்துகளையும், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கேட்டு முடிவெடுக்க வேண்டும். மின் கட்டணத்தை உயர்த்துவதால் பொதுமக்களையும், விசைத்தறி தொழில் கூடங்களையும், சிறு, குறு தொழில் நிறுவனங்களையும், பெரும் தொழில் நிறுவனங்களையும் மிகவும் பாதிக்கும் அபாயம் உள்ளது .
ஆனால் அதற்கு முன்னதாகவே , தற்பொழுது பெரும்பாலான தொழிற்சாலைகள் பயன்படுத்தும் கட்டண விகிதமான உயர் மின்னழுத்த நுகர்வோர் கட்டணம் 1 மற்றும் தாழ்வு மின்னழுத்த கட்டணம் 3 பி ஆகியவற்றில் நிலையான கட்டணம், பரிமாற்ற கட்டணம், உச்சநேர கட்டணம், பல ஆண்டு கட்டணம், நிலையான கட்டணம் உள்ளிட்டவை முன் அறிப்பின்றி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இவை மிகவும் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருக்கிறது. மின் நுகர்வு அளிவீடு பதிவு செய்யும் மின்சாரவாரிய ஊழியர்கள் உரிய தேதியில் பதிவு செய்ய வேண்டும். ஒரு யூனிட் உயர்ந்தால் பல மடங்கு கூடுதலாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது .
உதாரணமாக 500 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் ரூ.1,330 செலுத்த வேண்டும் . அதுவே ஒரு யூனிட் அதிகமாக இருந்தால், அதாவது 501 வந்தால் ரூ. 2,127 செலுத்த வேண்டியது இருக்கிறது. மின்சார ஊழியர்கள் ஒருநாள் தாமதமாக வந்தால் ரூ. 797 கூடுதலாக செலுத்த வேண்டிய நிலை உள்ளது. தற்பொழுது உள்ள நிலையே இப்படி என்றால் மின் கட்டணம் உயர்ந்தால் சாதரண மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மின் நுகர்வு அளவீடு இரண்டு மாத்திற்கு ஒருமுறை எடுப்பதற்கு பதிலாக ஒவ்வொரு மாதமும் எடுக்க வேண்டும். மேலும், மின்சார வாரியம் நிதி சுமையில் இருந்து விடுபட தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின்சார கட்டணத்தை உயர்த்தாமல் மாற்று வழியில் வருமானத்தை ஈட்ட வேண்டுமே தவிர பொதுமக்கள் தலையிலும், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தோள்களிலும் சுமையை ஏற்றக் கூடாது. அனைத்துத் தரப்பு மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மின் கட்டண உயர்வு அறிவிப்பை தமிழக அரசு கைவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








