மலேசிய முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழர்களின் முகமாக திகழ்ந்த டத்தோ எஸ். சாமிவேலு காலமானார். அவருக்கு வயது 86.
டத்தோ எஸ். சாமிவேலு மலேசிய அமைச்சரவையில் 29 ஆண்டுகள் மூத்த அமைச்சராக இருந்து பதவி வகித்தவர். தகவல் தொழில்நுட்பம், பொதுப் பணி போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராகப் பதவி வகித்தவர். நீண்ட காலம் மலேசிய அமைச்சரவையில் இருந்தவர் எனும் சாதனையும் இவருக்கு உண்டு. இவருடைய அரசியல் வாழ்க்கையில் சாதனைகளும் சோதனைகளும் உள்ளன.
முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “மலேசிய இந்திய காங்கிரசின் தலைவராக நீண்ட காலம் இருந்தவரும், 29 ஆண்டுகள் அந்நாட்டின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்த மூத்த தலைவருமான துன் எஸ். சாமிவேலுவின் மறைவு வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் மலேசிய வாழ் இந்தியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.








