தென்காசி மாவட்டம் மேக்கரை வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத் தீயால், 100 ஏக்கர் பரப்பிலான அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகைச் செடிகள் எரிந்து நாசமடைந்துள்ளன.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளானது ஏராளமான அரிய வகை தாவரங்கள், மூலிகை மரங்கள், மூலிகைச் செடிகள் மற்றும் பல்லுயிர் வன உயிரினங்கள் வாழும் வாழிடமாக திகழ்ந்துவரும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக திகழ்ந்து வருகிறது. இப்படிப்பட்ட, மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இந்த வருடம் வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதன் காரணமாக, மலைப்பகுதிகளில் உள்ள மூலிகைச் செடிகள், மரங்கள் உள்ளிட்டவை காய்ந்த நிலையில் காணப்பட்டு வருகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இப்படி காய்ந்த நிலையில் காணப்பட்டு வரும் மரங்கள், செடிகளில் அவ்வப்போது தீப்பற்றி எறிவது என்பது தொடர் கதையாகி வருகிறது. குறிப்பாக, மர்ம நபர்கள் சிலர் இந்த தீ விபத்தை அரங்கேற்றி விடுவதாகவும் வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படும் சூழலில், தென்காசி மாவட்டம் மேக்கரை பகுதியில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு திடீரென தீப்பற்றி எறியத் தொடங்கியுள்ளது.
இதை பார்த்த அப்பகுதியில் வசித்து வருபவர்கள் உடனே வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கவே, வனத்துறையினர் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயானது கட்டுக்குள் வராமல் காற்றின் வேகம் காரணமாகத் தொடர்ந்து பரவி சுமார் 100 ஏக்கர் பரப்பிலான காடுகள் அனைத்தும் எரிந்து நாசமாகின.
மேலும், தீ பற்றி எரிந்து கொண்டிருக்கும்போது மலையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் தீ பரவி விடக்கூடாது என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் உள்ள விவசாயிகள் தீயை விவசாய நிலங்களுக்குள் பரவ விடாமல் இலை தலைகளைக் கொண்டு அணைத்தனர். விவசாயிகளின் கடும் முயற்சி காரணமாகத் தீயானது கீழ்நோக்கி பரவாமல் மேல் நோக்கி சென்ற போதும், ஒரு சில குறிப்பிட்ட விவசாய நிலங்கள் இந்த தீ விபத்தால் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது, ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்தால் ஏராளமான மரங்கள், மூலிகைச் செடிகள் உள்ளிட்டவை தீயிலிருந்து நாசமாகி உள்ள சூழலில், இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன? மர்ம நபர்கள் யாரேனும் தீயை பற்ற வைத்தார்களா? இல்லையெனில் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீ பற்றியதா? என்பது குறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.