தமிழ்நாட்டில் தக்காளி விலை அதிகரித்துள்ள நிலையில் , துவரம் பருப்ப விலையும் உயர்ந்துள்ளது.
கடந்த சில நாட்களாக தக்காளி விலை ஒரு கிலோ 40 ரூபாயிலிருந்து படிப்படியாக உயர்ந்து தற்போது 130 ரூபாயை தொட்டுள்ளது. தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 82 ரேசன் கடைகளில் இன்று முதல் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டம் அடுத்த சில நாட்களில தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதனிடையே துவரம் பருப்பு விலையும் தற்போது அதிகரித்துள்ளது. கடந்த வாரம் ரூ.90-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.140 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைந்திருப்பதால், தமிழகத்திற்கு வரும் மளிகை பொருட்கள் அளவு குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக உணவுப் பொருட்களின் விலை 20 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.
ஒருசில ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். தக்காளி, துவரம்பருப்பு மட்டுமின்றி, மிளகாய் தூள், சர்க்கரை, மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை நடுத்தர மக்கள் அவதிக்குள்ளாயினர்.





