மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவைத் தொடர்ந்து மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ தற்போது புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவர் அமைச்சராக பொறுப்பு வகித்து வந்த சட்ட அமைச்சகம் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சராக இதற்கு முன் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சட்ட அமைச்சராக இருந்த போது நீதிபதிகளை நியமனம் செய்யும் கொலிஜியம் அமைப்பிற்கு எதிராக கிரண் ரிஜிஜு தொடர்ந்து பேசி வந்த நிலையில், அவரது சட்ட அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அவருக்கு புவி அறிவியல் துறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய சட்டத்துறை இணையமைச்சரான எஸ்.பி.சிங் பாகல் சுகாதாரத்துறை இணை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒரே துறையைச் சார்ந்த அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.







