நடிகர் “பூ” ராமு மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தனது திரையுலக நடிப்பால் தமிழக மக்களின் நெஞ்சங்களில் இடம் கொண்ட நடிகர் தோழர் பூ ராமு அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வீதி நாடகக் கலைஞராக இடதுசாரி கருத்துகளை வெகுமக்களிடம் கொண்டு சென்ற அவரது பணியை முற்போக்காளர்கள் என்றும் நினைவுகூர்வார்கள்.
பூ திரைப்படத்தின் வழியாகத் தனது நடிப்பாற்றலால் திரையுலகில் தடம் பதித்த அவர், நெடுநல்வாடை, பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்கள் வழியாகத் தனக்கென மக்களின் மனங்களில் தனியிடம் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.
தனது பயணத்தை நிறைவுசெய்துகொண்ட தோழர் பூ ராமு அவர்களது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக கலைஞர்கள் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.