தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் (ஜூன் 3) அரசு விழாவாக கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அண்ணா சாலையில் உள்ள கலைஞர் சிலைக்கு மரியாதை செலுத்துதல் உட்பட பல்வேறு நிகழ்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
குறிப்பாக, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை சார்பில் பிரம்மாண்டமான மலர் கண்காட்சி நடைபெற உள்ளன. இதற்காக, ஊட்டி, கிருஷ்ணகிரி , கொடைக்கானல், ஏற்காடு போன்ற பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மலர் வகைகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். 5ம் தேதி வரை நடைபெற உள்ள கண்காட்சியை பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான நுழைவுக்கட்டணமாக மாணவர்களுக்கு 20 ரூபாயும் பெரியவர்களுக்கு 50 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த கண்காட்சியில் மலர்களால் வடிவமைக்கப்பட்ட மயில், குதிரை, சிங்கம், கரடி சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. ஊட்டி, ஏற்காடு போன்ற மலைப்பிரதேசங்களில் மட்டுமே பிரமாண்ட மலர்கண்காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் முதல்முறையாக பிரமாண்ட மலர் கண்காட்சி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. “ஆண்டுதோறும் ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும். சென்னை மக்களின் மன அழுத்தத்தை போக்கும் விதமாக மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது” என்று வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செயற்கையாக குளிரூட்டப்பட்ட அறைகளில் மலர் கண்காட்சி நடத்தப்படுவதால் மூன்று நாட்கள் மட்டுமே நடத்தப்படுகிறது. மேலும் முதலாவது சென்னை மலர்க் கண்காட்சியில் சுமார் 4 லட்சம் பல்வேறு வகையான மலர்களும், 10 ஆயிரம் மலர் தொட்டிகள், 2 டன் பழங்களும் உபயோகப்படுத்தப்பட உள்ளது. கேரட், முள்ளங்கி, பரங்கிக்காய், கருணைக்கிழங்கு, தர்பூசணி முதலிய காய்கறிகள் பயன்படுத்தப்படவுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்