கடலூர் மாவட்டத்தில் டி.கள்ளயங்குப்பம் கிராமத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், தீர்த்தனகிரி மதுரா T. கள்ளயங்குப்பம் கிராமம், பொட்ட கரைமேடு காலனியைச் சேர்ந்த திரு.ஜெயசங்கர் என்பவரின் மனைவி திருமதி.சிவசங்கரி (வயது 33) நேற்று (23.07.22) பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் அவர்களது வீட்டில் உறங்கிக் கொண்டிந்தபோது, எதிர்பாராதவிதமாக வீட்டின் கான்கிரீட் மேற்கூரையின் அடிப்பகுதி அவர்மீது இடிந்து விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூபாய் இரண்டு இலட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று அந்த அறிக்கையில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.







