திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே, சிறுமி குறித்து அவதூறு பரப்பியவர்கள் குறித்து புகார் அளித்ததால், அந்த குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே உள்ள சின்ன மாங்கோடு மீனவ கிராமத்தில், குப்பம்மாள் என்பவர் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரின் 16 வயது மகள், ஆந்திர மாநிலம் தடா பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கிராமத்தைச் சேர்ந்த சிலர் சிறுமிக்கு திருமணமாகிவிட்டதாக அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து குப்பம்மாள், ஆரம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையறிந்த கிராமத்தினர், ஊர் கட்டுப்பாட்டை மீறி விட்டதாகக் கூறி, குப்பம்மாள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். அத்துடன் காவல் நிலையத்தில் புகார் அளித்ததால், கிராமத்தினர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும் கிராமத்தினர் குப்பம்மாள் குடும்பத்தினருக்கு நிபந்தனை விதித்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டார். இதையடுத்து, சின்ன மாங்கோடு கிராமத்திற்கு வந்த சமூக நலத்துறை அதிகாரிகள், இந்த விவகாரம் குறித்து கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







