வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில், சேலம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் போல வேடம் அணிந்து வந்த 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பகுதியைச் சேர்ந்த ரியாஸ் மகன் சல்மான் ரியாஸ் (23), சேலம் தளவாய்ப்பட்டி அருகே உள்ள சித்தர்கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (23) ஆகிய இருவரும் நண்பர்கள். வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வரும் கமல்போல, இருவரும் சேர்ந்து மருத்துவராக மாறத் திட்டமிட்டு ஸ்டெதஸ்கோப், கோட் எல்லாம் போட்டுக்கொண்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கண் சிகிச்சை பிரிவுக்கு நேற்று மதியம் 12.30 மணிக்குச் சென்றுள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, பணியில் இருந்த செவிலியரிடம் டிஸ்சார்ஜ் நோயாளிகள் பட்டியலைக் கேட்டு தொடர்ந்து பயிற்சி மருத்துவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. சந்தேகமடைந்த செவிலியர்கள் அவர்கள் இருவரையும் பிடித்து ஆர்எம்ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அப்போது, விசாரித்ததில் போலி அடையாள அட்டையை காட்டியதோடு மிரட்டும் தொனியில் பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் இருவரையும் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இருவரையும் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு நோயாளிகள் கொடுக்கும் மரியாதையைப பார்த்து அதே போன்று அவர்களுக்கும் நோயாளிகள் மரியாதை கொடுப்பதை காண வேண்டும் என்று விபரீத ஆசை ஈடுப்பட்டு இளைஞர்கள் காவல் துறையினரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதி மக்களிடையை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-ம.பவித்ரா