ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்து – ஒருவர் உயிரிழப்பு… பலர் காயம்!

ஒடிசாவில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் இருந்து நேற்று (மார்ச் 31) காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் (12551) கவுகாத்தி நோக்கி சென்றுக்கொண்டிருந்தது. அப்போது நேற்று காலை 11.55 மணியளவில் ஒடிசா மாநிலம், மங்குலி அருகே நிர்குன்டியில் இந்த ரயிலின் 11 பெட்டிகள் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த ரயில் விபத்து குறித்து உடனடியாக மீட்பு படையினருக்க தகவல் அளிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள் : நாடு முழுவதும் ரமலான் பண்டிகை இன்று கோலகல கொண்டாட்டம்… தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை!

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் ஒடிசா தீயணைப்பு துறையினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டன. மேலும், சம்பவ இடத்திற்கு நிவாரண ரயிலும் விரைந்தது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30 காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சம்பவத்தின் போது ரயில் மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.