சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளது. இந்த நிலையில் இன்று காலை பட்டாசு தொழிலாளர்கள் வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர். அப்பொழுது ஒரு அறையில் ஏற்பட்ட வெடி விபத்தினால் பலத்த சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இந்த தீ அருகில் இருந்த அறைகளுக்கு பரவியது. இந்த விபத்தில் 10 க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி தீயணைப்பு வாகனங்கள் சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்கு பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்தில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் ஜேசிபி வாகனம் மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.