முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ரூ.404 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி மதுரையில் தொடங்கப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு முன்னோடி முயற்சியாக செயல்படுத்தப்பட்ட இத்திட்டத்தில், முதல்கட்டமாக, 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1.14 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.
இதனால், பள்ளிகளுக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனடிப்படையில், தமிழக அரசு இந்த திட்டத்தை 2023-2024-ம் ஆண்டில் விரிவாக்கம் செய்து, படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ரூ.404 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்து தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15,75,900 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்காக ரூ.404 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளுக்கு மாநகராட்சி ஆணையரும், ஏனைய மாநகராட்சி, ,நகராட்சி மற்றும் பேரூராட்சி பள்ளிகளுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் பொறுப்பு அலுவலர்களாக நியமனம் செய்யப்படுகின்றனர். ஊரகப்பகுதிகளில் உள்ள 28 ஆயிரம் பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டத்தினை செயல்படுத்தும் பொறுப்பு அலுவலராக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை உணவுத்திட்டத்தினை செயல்படுத்தும் போது வாரத்தில் குறைந்தது இரு நாட்களாவது பகுதியில் கிடைக்கும் சிறு தானியங்களை கொண்டு உணவு தயாரிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.