பொறியியல் கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த மாணவி நேத்ரா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி..!!

பொறியியல் கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த மாணவி நேத்ரா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம்…

பொறியியல் கலந்தாய்வில் முதல் இடம் பிடித்த மாணவி நேத்ரா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 450-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 54 ஆயிரம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை நடைபெற்றது. பொறியியல் கல்லூரிகளில் சேர இரண்டு லட்சத்து 29 ஆயிரத்து 167 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் விண்ணப்பக் கட்டணங்களுடன், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்தனர். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் கடந்த 20-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியானது.

தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவிகளுக்கான பாராட்டு விழா விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம் சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ராவும் ஒருவர். இவர் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் 598 மதிப்பெண்கள் எடுத்திருந்தார். ஆனால், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளின் குளறுபடியால் மாணவி நேத்ரா சென்னை அழைத்துவரப்படவில்லை. இது தொடர்பான செய்தி நியூஸ் 7 தமிழில் வெளியானது. இதனையடுத்து, மாணவியை சென்னை அழைத்துச் சென்று நடிகர் விஜய்யிடம் பரிசு பெற்றுத் தருவதாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். இதில் விஜய் மக்கள் இயக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிறுத்தொண்டநல்லூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த நேத்ரா என்ற மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 598 மதிப்பெண்களுடன் தரவரிசை பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார்.

பொறியியல் கலந்தாய்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற  சிறுதொண்டநல்லூரைச் சேர்ந்த மாணவி நேத்ரா நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்ததாவது..

“ கஷ்டப்பட்டு படித்ததற்கான கூலிதான் இந்த பரிசு. நான் இந்த இடத்தை பெறுவதற்கு எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் உறுதுணையாக இருந்தனர். அண்ணா பல்கலைகழகத்தில் கம்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பில் சேர ஆர்வமாக உள்ளேன்” என நேத்ரா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.