சென்னையில் உள்ள 14 அமுதம் அங்காடிகள் மற்றும் அமுதம் நியாய விலைக் கடைகளில் கொள்முதல் விலைக்கு விறக்கப்படும் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
அதன்படி தக்காளி ஒரு கிலோ ரூ.60க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் அத்தியாவசிய பொருட்களான துவரம் பருப்பு 500 கிராம் ரூ.75க்கும், உளுத்தம் பருப்பு 500 கிராம் ரூ.60க்கும் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவருவது தொடர்பாக தமிழ்நாடு உணவுத்துறை சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.பொதுமக்களின் நலன் கருதி உணவுத்துறை சார்பில் கொள்முதல் விலைக்கு அத்தியாவசிய பொருள்களை விற்க முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் 90 ரூபாய்க்கு விற்கப்பட்ட துவரம் பருப்பு ஜூலை முதல் வாரத்தில் 170 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. மளிகை பொருட்கள் விலையும் உச்சம் அடைந்துள்ள நிலையில் நடுத்தர மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர்.
அந்த வகையில் வெளிச்சந்தையில் துவரம் பருப்பு 90 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அமுதம் மக்கள் அங்காடியில் 500 கிராம் 15 ரூபாய் குறைவாக 75 ரூபாய்க்கும், உளுத்தம் பருப்பு வெளிச்சந்தையில் 75 ரூபாய் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் அமுதம் மக்கள் அங்காடியில் 500 கிராம் 15 ரூபாய் குறைவாக 60 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.மேலும் வெளிச்சந்தையில் இன்று தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அமுதம் மக்கள் அங்காடியில் தக்காளி 1 கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு நபருக்கு 1/2 கிலோ துவரம் பருப்பு, 1/2 கிலோ உளுத்தம் பருப்பு மற்றும் ஒரு கிலோ தக்காளி என வழங்கப்பட்டு வருகிறது.
சென்னை கோபாலபுரம் அமுதம் மக்கள் அங்காடியில் விற்பனை தொடங்கிய முதல் நாளான இன்று பெரும்பாலான பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பொருள்களை வாங்கி செல்கின்றனர்.






