நமது திரை அணுபவங்களை மேலும் மெருகேற்றும் வகையில் உருவாகியுள்ள ”எபிக்யூ”என்னும் புதிய தொழில்நுட்பத்தின் சோதனை காட்சி கோவை “பிராட்வே” திரையரங்கில் திரையிடப்பட்டது.
பொதுவாக திரையரங்குகளில் திரைப்படத்திற்கு முன் ”க்யூப்” என்று திரையிடப்படுவதை பார்த்திருப்போம்; இந்த க்யூப் தொழிநுட்பம் தான் நமது திரை அனுபவங்களை அடுத்த தளத்திற்கு எடுத்து சென்றது. கடந்த 10 ஆண்டுகளாக க்யூப் மூலமாகவே திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதற்கு முன்பாக ”டிடிஎஸ்” தொழிநுட்பத்தின் மூலம் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. பின்னர் 1995ம் ஆண்டு வெளியான குருதிபுனல் திரைப்படத்தின் மூலம் க்யூப் தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டது. க்யூப் திரை அனுபவத்தின் காரணமாக அதன் பின் வெளிவந்த அனைத்து திரைப்படங்களையும் திரையரங்கு உரிமையாளர்கள் க்யூப் தொழிநுட்பத்திலேயே திரையிடத் தொடங்கினர்.
இந்த க்யூப் மற்றும் எபிக்யூ தொழிநுட்பத்தினை திரைத்துறைக்கு அறிமுகம் செய்தவர்கள் செந்தில் குமார் மற்றும் ஜெயேந்திர பஞ்சபகேசன் ஆவர். இந்தியாவின் முதலாவது எபிக் திரையானது, கடந்தாண்டு ஆந்திரப்பிரதேச மாநிலம், சூலூர்பேட்டையில் “வி எபிக்” என்ற திரையரங்கில் அமைக்கப்பட்டது.
அதன் பின்னர் தமிழ்நாட்டில் முதல்முறையாக கோவை மாவட்டத்தில் க்யூப் மற்றும் பிராட்வே சினிமாஸ் இணைந்து ‘எபிக்’ தொழில் நுட்பத்துடன் இயங்கும் திரை வசதியுடன் திரையரங்கு மற்றும் லேசர் தொழில்நுட்ப வசதியுடன் கூடிய ஐ-மேக்ஸ் திரையரங்கத்தை அறிமுகம் செய்துள்ளனர்.
கோவை அவிநாசி சாலையில் 9 திரைகளுடன் சினிமாவிற்கு என்றே பிரத்யேகமாக பிராட்வே சினிமாஸ் நிறுவனம், மால் ஒன்றை திறந்துள்ளது. இதில் 9 சாதாரண திரைகள், ஒரு கோல்டு திரையரங்கம், ஒரு எபிக்யூ திரையரங்கம், ஒரு ஐமேக்ஸ் திரையரங்கம் உள்ளது. இதில், ஏற்கனவே 6 சாதாரண திரையரங்குகள் திறக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்த நிலையில் தற்போது இதர மூன்று சிறப்பு வாய்ந்த திரையரங்குகளும் பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
வழக்கமான திரையரங்குகளில் 2:35 என்ற விகிதத்தில் திரை இருக்கும். ஆனால், இந்த எபிக் திரையரங்கில் 1:89 என்ற விகிதத்தில் திரை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், 70 அடி அகலம், 37 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான பெரிய திரையாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த திரையரங்கில் அமர்ந்து படம் பார்க்கும் போது பிரமாண்டத்தை உணர்வதோடு துல்லியமான படக்காட்சியையும் காண முடியும். ஆர்ஜிபி புரோஜெக்ட்டர், டால்பி அட்மோஸ் ஒலியுடன் 425 இருக்கையுடன் இந்த எபிக்யூ திரையரங்கம் அமைந்துள்ளது.
கோவையைத் தொடர்ந்து மதுரை, கேரளாவிலும் எபிக்யூ தொழில் நுட்ப வசதிகளுடன் திரையரங்கங்கள் அமைய உள்ளன என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்தனர். இந்த எபிக் திரைக்கு தற்பொழுது 360 ரூபாய் என தமிழ்த் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த எபிக்யூ திரையரங்கம் மற்றும் ஐமேக்ஸ் திரையரங்கம் ஆகியவை தற்போது கோவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.