டிராவில் முடிந்தது இங்கிலாந்து- நியூசிலாந்து முதல் டெஸ்ட்: ஆட்டநாயகன் விருது பெற்றார் கான்வே!

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன்…

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி யாருக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது.

இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடியது. அந்த அணியின் வீரர் டிவோன் கான்வே இரட்டை சதம் விளாசினார். அந்த அணி, முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 378 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர் ராபின்சன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பின்னர், ஆடிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுத்தது. அந்த அணியில், ராய் பர்ன்ஸ் அதிகபட்சமாக 132 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி 6 விக்கெட்டுகளை சாய்த்தார். பின்னர், 103 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 62 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. அதில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி, 3 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. யாருக்கும் வெற்றி தோல்வியின்றி இந்த போட்டி டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் 200 ரன்கள் குவித்த நியூசிலாந்து வீரர், கான்வே ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இங்கிலாந்து – நியூசிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 10 ஆம் தேதி தொடங்குகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.