அமலாக்கத்துறை காவலில் அமைச்சர் செந்தில் பாலாஜி அளித்த வாக்குமூலம் குறித்த விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சமர்பிக்க உள்ளனர்.
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், செந்தில் பாலாஜி கைது சரியானது எனவும், அவரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்தும் தீர்ப்பளித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதை எதிர்த்து மேகலா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், 5 நாட்கள் செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதியளித்து தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கோரி அமலாக்கத் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமலாக்கத் துறையினர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நிலையை கவனித்துக் கொள்ள வேண்டும் எனக் கூறி ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை வசம் ஒப்படைத்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறையிலிருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி சாஸ்திரி பவனுக்கு அழைத்து வரப்பட்டார். அங்குள்ள 3-வது மாடியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர்.
5 நாட்களில் அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுமார் 300க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்ததாக கூறப்படுகிறது. செந்தில் பாலாஜியின் வாக்குமூலம் வீடியோவாகவும், எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இன்றுடன் விசாரணை முடிந்துள்ள நிலையில் அவரை மருத்துவ பரிசோதனை செய்து நீதிபதி முன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். 5 நாட்கள் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவர் அளித்த வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையாக தயாரித்து டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர்.
அமலாக்கத்துறை துணை இயக்குனர் கார்த்திக் தசாரி தலைமையில் செந்தில் பாலாஜியிடம் நடத்தப்பட்ட காவல் விசாரணை அறிக்கையை தயார் செய்யும் பணியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அடுத்த வாரம் இந்த விசாரணை அறிக்கையை அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி அளித்துள்ள பதில்கள் திருப்திகரமாகவும், நம்பகத்தன்மையுடனும் இருக்கிறதா என்பது குறித்து அமலாக்கத்துறை தலைமை அலுவலக அதிகாரிகள் ஆலோசித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வார்கள் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.