மர்ம நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் விளாடிமிர் புடினுக்கு அவசர மருத்துவ உதவிகள் தேவைப்படுவதாக உள்நாட்டு மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் உடல் நிலை குறித்த செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே புதின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அண்மையில் வெளியான செய்தி ஒன்றில் புதின் கனைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. 69 வயதாகும் புதினின் கனைய புற்றுநோய் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இதற்காக விரைவில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருக்கும் என்றும் கூறப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இது மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை என்றும், புதினுக்கு ஏதாவது ஏற்பட்டால் நிலைமையைச் சமாளிக்கவும் ரஷ்யாவை நிர்வகிக்கவும் சிறப்பு கவுன்சில் ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் அந்நாடு தெரிவித்திருந்தது. புதிய அதிபரைத் தேர்ந்தெடுக்கும் வரை இந்த இடைக்கால அமைப்பிடம் தான் ரஷ்யாவின் ஒட்டுமொத்த கட்டுப்பாடும் இருக்கும் எனக் கூறப்பட்டது.
இதனிடையே, உக்ரைன் விவகாரத்தில் புதினின் நடவடிக்கை மென்மையாக இருப்பதால், இதனால் அவரை நீக்க ரஷ்ய உளவுத் துறை திட்டமிட்டுள்ளதாக கிங்ஸ் கல்லூரியின் பாதுகாப்பு ஆய்வுக் கல்வியாளர் டாக்டர். ராபர்ட் தோர்ன்டன் தெரிவித்திருந்தார். உள்நாட்டு உளவுத்துறையே புதினை தீர்த்து கட்டிவிட்டு உக்ரைன் விவகாரத்தில் புதிய நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், விளாடிமிர் புதினுக்கு தற்போது அவசர மருத்துவ உதவி தேவைப்படுவதாக அந்நாட்டு மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதனால் பொது இடங்களில் புதின் செல்ல வேண்டாம் என்றும், பொது மக்களிடத்தில் நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகளில் புதின் கலந்து கொள்ள கூடாது என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் இந்த மாதத்தில் புதின் அதிகாரிகளுடன் நடத்தும் ஆலோசனைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ராணுவ பிரதிநிதிகளுடன் கலந்து கொண்ட ஆலோசனையின் போது, புதினுக்கு உடல் பாதிப்பு உணரப்பட்டதாகவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேத்தில் புதின் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்தால் அவரது நிகழ்ச்சிகள் ஆகஸ்ட் மாதத்தில் வைத்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ரஷ்யா – உக்ரைன் விவகாரத்தில் அடுத்தடுத்த நிகழ்வுகள் என்ன நடக்க போகிறது என்ற அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் செய்திகளும் தெரிவித்து வருகின்றனர். அதேநேரத்தில் உளவுத்துறை அதிகாரியாக இருந்து இன்று அதிபர் வரை முன்னேறியுள்ள விளாடிமிர் புதினுக்கு இது சாதாரண நிகழ்வுகள் இல்லை என்றும் அவர் வேறு எதாவது திட்டம் வைத்திருக்கலாம் என்றும் உள்ளூர் செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.
– இரா.நம்பிராஜன்