உடுமலை அமராவதி வனச்சரகத்தில் மூணாறு செல்லும் சாலையில் யானைகள் முகாமிட்டுள்ளன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் ஏராளமான காட்டு யானைகள், மான், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. அமராவதி வனச்சரகத்தில் மூணாறு செல்லும் சாலை அமைந்துள்ளதால், இவ்வழியே சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சென்று வந்த வண்ணம் இருந்தன.
வாகன ஓட்டிகளால், சாலையை கடந்து அமராவதி அணைக்கு வர முடியாமல் சிரமப்பட்ட யானைகள் தண்ணீர் குடிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தன. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மூணாறு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால், வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் யானைகள் நீர் அருந்துவதற்காக தங்கள் குட்டிகளுடன் அமராவதி அணையை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளன. மேலும் சில யானைகள் சாலையோரங்களில் முகாமிட்டு ஓய்வெடுக்கின்றன.







