யானை தாக்கி உயிரிழப்பு – வனத்துறை விசாரணை

பவானிசாகர் வனப்பகுதியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட…

பவானிசாகர் வனப்பகுதியில் யானை தாக்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் உள்ள விளாமுண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட பவானிசாகர் வனப்பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

 

அந்த நபர் யானை தாக்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் அவர், பவானிசாகர் அருகே தொப்பம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பது தெரியவந்தது. இவர் நேற்று காலை ஒத்த பனைமரக்காடு பகுதியில் உள்ள தனது தோட்டத்துக்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, காட்டு யானை தாக்கியதில் சக்திவேல் உயிரிழந்ததாக காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது உடலை மீட்ட போலீசார் உடற்கூறாய்வுக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, சக்திவேல் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.