நடிகர் அஜித் குமாருக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து !

கார் பந்தயத்தில் மூன்றாம் இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 991 பிரிவில் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேசிங்’ அணி மூன்றாவது இடம் பிடித்து அசத்தியுள்ளது. தனது அணி மூன்றாவது இடம்பிடித்த நிலையில், நடிகர் அஜித்குமார், இந்திய தேசியக்கொடியுடன் வலம் வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த கார் பந்தயத்தில் பங்கேற்க தயாராகி வந்த அஜித் குமார் கடைசி நேரத்தில் பந்தயத்தில் இருந்து விலகிக் கொண்டார். எனினும், அவரது அணி பங்கேற்றது.

கார் பந்தயத்தில் மூன்றாவது இடம்பிடித்த அஜித்குமார் ரேசிங் அணிக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

துபாயில் நடைபெற்ற 24H கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்துள்ள முன்னணி நடிகர், அன்புச் சகோதரர் அஜித்குமார் தலைமையிலான அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! மேலும் பல வெற்றிகளைக் குவித்து, நம் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன் ! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.