கன மழை காரணமாக இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நேற்று (03.02.2023) தென்மேற்கு திசையில் நகர்ந்து 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நாளை தொடங்கி 07-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று தென் மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்..
”அடுத்த ஒன்று முதல் மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளிலும் பெய்ய வாய்ப்புள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும் என எதிர் பார்க்கப்படுகிறது. கன மழை காரணமாக மாணவர்கள் நலன் கருதி இன்று பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல கனமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு (04.02.2023) இன்று சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
– யாழன்







