மக்களவையில் சாதி, மதத்தை பற்றி பேசக்கூடாது- சபாநாயகர் ஓம் பிர்லா எச்சரிக்கை

மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார். நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று மக்களவையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு…

மக்களவையில் எம்.பி.க்கள் யாரும் சாதி, மதத்தைக்கூறி பேசக்கூடாது என சபாநாயகர் ஓம் பிர்லா கடுமையாக எச்சரித்தார்.

நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் நேற்று மக்களவையில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருவது பற்றி, தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. ஏ.ஆர்.ரெட்டி கேள்வி எழுப்பினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது, ரூபாய் மதிப்பு சரிந்து வருவதை குறிப்பிடுகையில் ரூபாய் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டார் என்று கூறினார்.

இதற்கு சபாநாயகர் ஓம்பிர்லா எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கேள்வியை மட்டும் கேட்க வேண்டும் என்று கண்டித்தார். அதற்கு அவர் சபாநாயகரை நோக்கி, “சார், நீங்கள் இதில் குறுக்கிடமுடியாது” என கூறினார். சபாநாயகர் ஓம்பிர்லா, “சபாநாயகரிடம் இப்படிப் பேசக்கூடாது” என கண்டித்தார். அத்துடன் சபையில் இருந்த மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியை நோக்கி சபாநாயகர் ஓம் பிர்லா, “சபாநாயகருக்கு எதிராக இப்படியெல்லாம் ஒருபோதும் பேசக்கூடாது என்பதை உங்கள் கட்சி எம்.பி.க்கள் புரிந்துகொள்ளுமாறு சொல்லுங்கள்” என அறிவுறுத்தினார்.

இருப்பினும் அந்த எம்.பி. கேள்வி கேட்க அனுமதித்தார். அவரது கேள்விக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அப்போது, நாட்டின் பொருளாதாரம் நிச்சயமாக தீவிர சிகிச்சைப்பிரிவில் தான் இருந்தது. 5 சதவீத பொருளாதார வளர்ச்சி தான் இருந்தது. இன்றைக்கு கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு மத்தியிலும், உக்ரைன்-ரஷ்யா போருக்கு இடையேயும் இந்திய பொருளாதாரம் வேகமான வளர்ச்சி காணும் பொருளாதாரமாக உள்ளது. இது பெருமைக்குரிய விஷயம். ஆனால் இதை அவர்கள் வேடிக்கையாக்குகிறார்கள். நாட்டின் பொருளாதாரம் நல்ல நிலையில் இருக்கும் போது அவர்கள் பொறாமையால்தான் அப்படிப்பட்ட விஷயங்களைப் பேசுகிறார்கள் என்று அவர் கூறினார்.

இந்த நிலையில், தான் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்பதால் தான் தனது இந்தி மொழி புலமை பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில வார்த்தைகளை குறிப்பிட்டார் என ஏ.ஆர்.ரெட்டி குற்றம்சாட்டினார். அப்போது அவர் தனது சமூகப் பிரிவையும் குறிப்பிட்டார்.

அவர் மக்களவையில் சாதிப்பெயரைக் குறிப்பிட்டதால் அதிர்ந்து போன சபாநாயகர் ஓம்பிர்லா, “மக்களவை உறுப்பினர்களை மக்கள் சாதியின் அடிப்படையிலோ, மதத்தின் அடிப்படையிலோ தேர்ந்தெடுக்கவில்லை. யாரும் சபையில் இத்தகைய வார்த்தைகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதை மீறி பேசினால் அவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வேண்டியது வரும்” என கடுமையாக எச்சரித்தார். இது சபையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.