பித்தப்பை பாதித்து உயிருக்கு போராடிய 4 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே உள்ள சமயபுரம் பகுதியை சேர்ந்த தம்பிராஜா – மீனா தம்பதியர் கூலி வேலை செய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களது நான்கு வயது மகள் தன்யாஸ்ரீ பிறக்கும்போதே கணையத்தில் இருந்து செல்லும் பித்தக் குழாய் முழுமையாக செயலிழந்து பாதிக்கப்பட்டது. இதனால் அடிக்கடி காய்ச்சல், வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை போன்றவற்றால் தான்யாஸ்ரீ அவதிப்பட்டு வந்துள்ளார். தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க அதிக பணம் தேவைப்படும் என்பதால், கூலித் தொழிலாளிகளான தம்பிராஜா மற்றும் மீனா தம்பதியர் செய்வதறியாது தவித்து வந்தனர்.

இந்த நிலையில் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு குழந்தை தான்யாஸ்ரீயை அழைத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஆறு மணி நேரம் போராடி அறுவை சிகிச்சை மூலம் பித்தப் பையினை அகற்றிவிட்டு மாற்று பித்தப்பை பொருத்தியுள்ளனர். மகளின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு தம்பிராஜா, மீனா தம்பதியர் கண்கலங்க நன்றி தெரிவித்தனர்.







