மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் வரும் 17-ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, திமுக இளைஞர் அணிச் செயலாளரும், மாநில அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின்கீழ் வரும் மத்திய பின்னிருப்புக் காவல் படையினர் (சி.ஆர்.பி.எப்.) வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிக்கையில், கணினி தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது மிகவும் கண்டனத்திற்குரியதாகும்.
இந்தி பேசாத மாநில மக்களை புறக்கணித்து, இந்தி மட்டுமே இந்தியா என கட்டமைக்க நினைக்கும் மத்திய பாஜக அரசை திமுக இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிக்கிறது.
சிஆர்பிஎப் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிப்பது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மொத்தமுள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழியில் அடிப்படைப் புரிதலுக்கென ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், இத்தேர்வு இந்தி மொழி பேசுவோருக்கே மிகவும் சாதகமாக அமைந்துள்ளது. சுருங்கச் சொன்னால், மத்திய பின்னிருப்பு காவல்படையின் இந்த அறிவிக்கை தமிழ்நாட்டிலிருந்து விண்ணப்பிப்போரின் நலனுக்கு முற்றிலும் எதிரானதாக உள்ளது. இது தன்னிச்சையானது மட்டுமல்லாமல் பாகுபாடு கட்டக்கூடியதும் ஆகும்.
இப்பணியில் சேருபவர்களின் தகுதியென்பது, நல்ல உடல் வலிமை, அறிவுக்கூர்மை, கட்டுப்பாடான ஒழுக்கம் ஆகியவையே அடிப்படையாக கொண்டிருக்க வேண்டும் எனும் போது, இந்தி பேசுபவர்களுக்கு மட்டுமான தேர்வாக இதனை கட்டமைக்க முயற்சிக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம். அதற்கு மாறாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானதாகும்.
இந்தி பேசாத மக்கள் மீது, இந்தியை திணித்தே தீருவேன் என்றும், மத்திய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள எல்லா துறைகளிலும் இந்தியை மட்டுமே கட்டாயமாக்குவேன் என்றும், இந்தி பேசாத மக்களை இரண்டாம் தர குடிமக்களாய் கருதப்படும் என்றும் பாசிச பாஜக அரசு சர்வாதிகார தன்மையோடு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
வேற்றுமையில் ஒற்றுமை காண்போம் என்பது தான் இந்திய துணைக்கண்டத்தின் ஒரே முழக்கமாகும். ஆனால், மத்திய பாஜக அரசு தொடர்ந்து “ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே தேர்வு, ஒரே மதம்” என்று பாசிச, சர்வாதிகார தன்மையோடு செயல்படுவதை திமுக இளைஞர் அணி-மாணவர் அணி வன்மையாக கண்டிகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சரிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டதற்கிணங்க, நடைபெறவுள்ள சி.ஆர்.பி.எப். தேர்வில் இந்தி பேசாத மாநில இளைஞர்களும் சமவாய்ப்பு பெறும் வகையில், தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளில் கணினி தேர்வினை நடத்துவதற்கு உடனடியாக மறுஅறிவிப்பு வழங்கிட, மத்திய உள்துறை அமைச்சகத்தினை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞர் அணி-மாணவர் அணி சார்பில், வரும் 17.04.2023 அன்று திங்கட்கிழமை மாலை 04.00 மணியளவில், சென்னை, நுங்கம்பாக்கம், “சாஸ்திரி பவன்” அருகில் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனரா்.
- பி.ஜேம்ஸ் லிசா










