ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 23 ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். முன்னதாக பளூதூக்குதல் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 2-ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இந்த நிலையில் தற்போது காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது. பாரா தடகள பிரிவில் இந்திய வீராங்கணை ஷர்மிளா தன்கர் குண்டு எறிதல் போட்டியில் தங்கம் வென்று அசத்தியுள்ளார். அவர் 9.81 மீட்டர் தூரத்திற்கு குண்டு எறிந்து முதலிடம் பிடித்தார். அதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கணையான ஷைலா வெண்கலம் வென்றார்.
அதேபோல 79 கிலோ எடைப்பிரிவு ஆடவர் பளூதுக்குதல் போட்டியில் வல்லூரி அஜய பாபு வெள்ளி வென்று அசத்தியுள்ளார். ஆவர், ‘ஸ்னாட்ச்’ பிரிவில் 149 கிலோவையும் (இது ஒரு போட்டி சாதனையாகும்), ‘கிளீன் அண்ட் ஜெர்க்’ பிரிவில் 181 கிலோவையும் தூக்கி, மொத்தம் 330 கிலோ எடையுடன் இரண்டாவது இடத்தை பிடித்தார்.
மேலும், ஆடவர் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் சர்வேஷ் குஷாரே 2.25 மீட்டர் உயரத்தை தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றார்.




