சட்டப் பல்கலைக் கழகங்களில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என திமுக எம்பி வில்சன் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், மத்திய அரசின் கல்வித் துறை அமைச்சர், சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சர், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், சட்டப் பல்லைக் கழக துணைவேந்தர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின்படி, லக்னோ மற்றும் கொச்சியில் உள்ள தேசிய சட்டப் பள்ளிகளில் மாநில இட ஒதுக்கீடு முறையை சரியாக பின்பற்றப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களில் உள்ள சட்டப் பல்கலைக் கழகங்கள், தேசிய சட்டப் பள்ளிகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான அரசியலமைப்பு சட்ட இட ஒதுக்கீடோ, மாநில இட ஒதுக்கீடோ பின்பற்றப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
திமுக முன்னெடுத்துச் சென்ற சட்டப் போராட்டத்தின் விளைவாக, மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு அறிக்கை செல்லும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டிய அவர் தேசிய சட்டப் பல்கலைக் கழங்களிலும், இட ஒதுக்கீடு தொடர்பாக யாராவது ஒருவர் வழக்கு தொடர்ந்து, இட ஒதுக்கீடு பெறும் வரை காத்திருக்காமல், சட்டப் படிப்பில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களுக்கு உரிய வாய்ப்பு அளிக்க அகில இந்திய ஒதுக்கீடு, மாநில அரசின் உரிய இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். உரிய இட ஒதுக்கீடு பின்பற்றவில்லை என்றால் சட்ட விளைவுகளை சந்திக்க வேண்டும் என அந்த கடிதத்தில் அவர் தெரிவித்து உள்ளார்.