முதல்வர் பேசும்போது அமைச்சர் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கிறார்: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில்…

திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர் ஒருவர் சிரித்துக் கொண்டிருக்கிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற  மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர் சந்தித்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது:

பொன்விழா ஆண்டை நிறைவு செய்யும் வகையில் கழக நிர்வாகிகளோடு கருத்துக்கள்
கேட்கப்பட்டு அதற்கேற்றவாறு நடைபெற அறிவுறுத்துதல் வழங்கப்பட்டது. திமுக குடும்ப ஆதிக்கம் இயக்கம் நெல்லிக்காய் மூட்டை எப்போது வேண்டுமானால்
சிதறலாம். முரசொலி செல்வம் என்ன பொறுப்பில் திமுகவில் இருக்கிறார். அவர் காலில்
விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்கள் இவர்கள் எப்படிப்பட்ட பகுத்தறிவாளிகள் என
கேட்டால் பெரியார் வழி வந்தவர்கள் என்றும் அண்ணா வழி வந்தவர்கள் என்றும்
சொல்லிக் கொள்கிறார்கள்.

மூத்த நிர்வாகிகள் கட்சியில் மதிக்கப்படவில்லை என்ற அடிப்படையில்
சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மூத்த
நிர்வாகிகள் யாருக்காவது துணைப் பொதுச் செயலாளர் பதவியை கொடுத்திருக்கலாம்.
ஆனால் அதை தனது அருமை தங்கைக்கு கொடுத்துள்ளார்.

தம்பி உடையான் படைக்கு அஞ்சான், கழகம் ஒரு குடும்பம் என்று அறிஞர் அண்ணா
சொல்வதைப் போல, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் கட்சியை மாற்றியுள்ளனர்.
ஆனால் குடும்பம், கழகம் என்று சொன்னால் அது திமுக தான். ஸ்டாலின் மொழியில்
தங்கை உடையான் படைக்கு அஞ்சான் என்று மாறி உள்ளது.

பொதுக்குழுவில் அடிக்கடி சர்வாதிகாரியாக மாறிவிடுவேன் என்று வார்த்தையை
பயன்படுத்தியவர் கட்சியில் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளவில்லை. முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலினுக்கு ஜெயலலிதா போல 1சதவீத துணிச்சல், தைரியம்
உள்ளதா? அவரால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிந்ததா?


அதிமுகவில் இது போன்று பேசினால் பொருப்பில் நீடிக்க முடியுமா? முதலமைச்சர், தலைவருக்கு உள்ள மரியாதை பொதுக் குழுவில் தெரிந்துவிட்டது. உலக நடப்பு, தமிழகத்தில் நடப்பது எதுவும் முதலமைச்சருக்கு தெரியவில்லை. பொம்மை முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

முதலமைச்சர் பதவியை துரைமுருகனுக்கு கொடுத்துவிட்டு மு.க.ஸ்டாலின்
ஓய்வெடுக்கலாம். முதல்வர் பேசும்போது ஒரு அமைச்சர் அமர்ந்து சிரித்துக் கொண்டிருக்கிறார் யார் அவர்…? பொன்முடி… நீங்க என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்று ஏளனமாக சிரிக்கிறார்…டி.ஆர். பாலு எம்.பி. வரிந்து கட்டிக்கொண்டு சென்று செருப்பு எடுத்து வா என்று சொல்லி மேடையில் செருப்பை போடுகிறார்.

ஒரு முதல்வருக்கு கட்சியினுடைய தலைவருக்கு பொதுக்குழுவில் எந்த அளவிற்கு மரியாதை இருக்கிறது என்பது இதை விட சொல்ல முடியாது என்றார் ஜெயக்குமார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.