31.4 C
Chennai
May 31, 2024
முக்கியச் செய்திகள் தமிழகம்

அடுத்த மாதம் திமுக பொதுக்குழு ?

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் ஆண்டுக்கு இருமுறை செயற்குழுவையும், ஒருமுறை பொதுக்குழுவையும் கூட்ட வேண்டும். ஆண்டுதோறும் பொதுக்குழுவை கூட்டி வந்த திமுக, 2021ஆம் ஆண்டு பொதுக்குழுவை நடத்தவில்லை. இதற்கு முன்பாக திமுக ஆட்சி அமைக்கும் சூழலில், ஒருசில மாதங்களுக்குள்ளாகவே பொதுக்குழுவை அப்போது தலைவராக இருந்த கருணாநிதி கூட்டி வந்தார். முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்ற ஒருசில மாதங்களில் பொதுக்குழு கூட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உட்கட்சி தேர்தலை நடத்தி விட்டு பொதுக்குழுவை கூட்டுவதற்கு திட்டமிடப்பட்டு, தேர்தல் ஆணையத்திடம் அனுமதியும் பெற்றுள்ளனர்.

பல்வேறு கட்டங்களாக தேர்தல்

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

1949 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட திமுக, 14 உட்கட்சி தேர்தல்களை நடத்தி முடித்துள்ளது. 15 ஆவது உட்கட்சி தேர்தல் கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி தொடங்கியது. கிளைக்கழகம் – பேரூர்க்கழகம் – மாநகர வட்டம் – ஒன்றியம் – நகரம் – மாநகர பகுதித் தேர்தல் – மாநகர தேர்தல் – மாவட்ட நிர்வாகிகள் – பொதுக்குழு உறுப்பினர்கள் – செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் என அடுத்தடுத்து நடைபெறும். இந்த தேர்தல்கள் முடிவுற்ற பின்னர் பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், தணிக்கைக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெறும்.

 

தாமதம்

பல்வேறு கட்டங்களாக நடைபெறும் தேர்தலில், ஒன்றிய பொறுப்புகளுக்கான தேர்தலே இன்னமும் முடிவடையாமல் உள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் மிக முக்கியமான காரணமாகவும், ஆட்சி அமைத்ததால் மேற்கொள்ள உடனடியாக வேண்டிய அரசுப் பணிகளால் தாமதம் இருந்தாலும், இதுவரை நடைபெற்ற தேர்தல் குறித்த புகார்கள் அதிக அளவில் வந்ததால், அதனை சுமூகமாக தீர்ப்பதற்கு என்பது உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்ட தாமதம் என உட்கட்சி தேர்தல் முடியாமல் உள்ளது.

இதற்கிடையில் 77 மாவட்டங்களாக உள்ள எண்ணிக்கை 50க்கும் குறைவாக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டு கைவிடப்பட்டதுடன், நிர்வாக வசதிக்காக எல்லை மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி கடந்த ஜூன் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டுவதற்கு திட்டமிடப்பட்ட நிலையில், அதுவும் கைவிடப்பட்டது.

அடுத்த மாதம் பொதுக்குழு?

கருணாநிதியின் நினைவு நாளான ஆகஸ்ட் 7 ஆம் தேதி அவரின் நினைவிடம் திறப்பதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது. அதனையொட்டி பொதுக்குழுவை நடத்தவும் திமுக தலைவர் ஸ்டாலின் திட்டமிட்டு வருகின்றார். எனவே அதற்கேற்றவாறு தேர்தல் பணிகளை முடுக்கிவிட கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டுள்ளார். அடுத்தடுத்தக் கட்ட தேர்தலை விரைவாக முடிப்பதுடன், சச்சரவுகள் இன்றி தேர்தலை நடத்தவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் அடுத்தகட்ட திமுக உட்கட்சி தேர்தல் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எதிர்பார்ப்புகள்

திமுக பொதுக்குழு கூட்டுவதற்கான திட்டமிடல் ஒருபக்கம் செல்லும் நிலையில், கடந்த 2020 செப்டம்பரில் காணொலி வாயிலாக நடைபெற்ற பொதுக்குழுவின்போது புதிய பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதனால் வரும் பொதுக்குழுவிலும் அதேபோன்ற அறிவிப்பிற்கும் சாத்தியமிருக்கும் என்று கூறி வருகின்றனர் திமுக நிர்வாகிகள். திமுகவில் 4 துணைப்பொதுச்செயலாளர்கள் என்றிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை 5 ஆக்கப்பட்டது. ஒருவேளை துணைப்பொதுச்செயலாளர்கள் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திட்டமிட்டால் ஜெகத்ரட்சகன், எ.வ. வேலு போன்றோருக்கு வாய்ப்பளிக்கப்படுமா?, பாஜக சென்று திமுகவிற்கு மீண்டும் திரும்பிய கு.க. செல்வத்திற்கு தலைமை நிலையச்செயலாளர் பதவி கிடைக்குமா? என பல்வேறு கேள்விகள், எதிர்பார்ப்புகளும் திமுகவினர் மத்தியில் நிலவி வருவதை மறுப்பதற்கில்லை.

இலா. தேவா இக்னேசியஸ் சிரில்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading