தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருவதால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பேருந்து மற்றும் ரெயில் நிலையங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதுகிறது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டிருப்பதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்ற வண்ணம் உள்ளனர். அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் தென் மாவட்டங்களுக்கு படையெடுப்பதால் செங்கல்பட்டை அடுத்த பரனூர் சுங்கச் சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால் நீண்ட தொலைவுக்கு அணிவகுந்து நிற்கும் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணியில் 30-க்கும் மேற்பட்ட காவலர்களும், சுங்கச் சாவடி ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பூர் மாநகரில் பணியாற்றும் வெளிமாநில மற்றும் வெளியூர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டதால் ரயில் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. இதனால் கோவையிலிருந்து சென்னை சென்ற இன்டர்சிட்டி ரயிலில் அதிக கூட்டம் காணப்பட்டது.பயணிகள் ஒருவரை ஒருவர் முந்தியடித்துக் கொண்டு சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு நிற்பதற்கு கூட இடமில்லாமல் தவித்தனர். இதனால் ரயிலில் பலர் ஆபத்தான முறையில் படியில் தொங்கியபடியே பயணம் செய்தனர். இதுபோலவே திருச்சி, மதுரை என பல முக்கிய நகரங்களிலும் பயணிகள் நெரிசல் காணப்பட்டது.