கேரளாவில் புத்தாண்டு தினத்தன்று வயநாடு மாவட்ட ஆட்சியர் கீதா, தமயந்தியாக வேடம் அணிந்து ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை கவர்ந்தது.
கேரள மாநிலம் வயநாடு மாவட்ட ஆட்சியராக இருப்பவர் கீதா. இவர் கதகளி நாட்டியத்தில் ஆர்வம் கொண்டவர். இவர் கோட்டக்கல் உன்னிகிருஷ்ணன் என்பவரிடம் கதகளி நாட்டியம் பயின்றவர். பின்னர் வயநாட்டில் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு ஏற்றதும் அங்கு நடந்த வள்ளியூர் காவு ஆறாட்டு விழாவில் கதகளி நடனம் ஆடினார். அந்த நடனம் சமூக வலைதளத்தில் வைரலானது.
இந்நிலையில் அவர் புத்தாண்டு தினத்தையொட்டி குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோயிலில் மீண்டும் கதகளி நடனம் ஆடினார். அந்த நாட்டியத்தில் அவர் தமயந்தியாக வேடம் அணிந்திருந்தார். பெண்களுடன் அவர் நளினமாக ஆடிய கதகளி ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
இதுகுறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் கீதா, ”குருவாயூர் கோயிலில் ஸ்ரீகிருஷ்ணர் வேடம் அணிந்து கதகளி ஆட வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் எனக்கு தமயந்தி வேடத்தில் ஆடவே வாய்ப்பு கிடைத்தது. இதுவும் மனதுக்கு நிறைவாக உள்ளது” என்றார்.







