அரசு நிலத்தில் குடியிருப்பை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த பாமக நிர்வாகி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரை அடுத்த ஆர்.ஏ.புரம் பகுதியில், கோவிந்தசாமி நகர் இளங்கோ தெருவில், அரசு நிலத்தில் குடியிருப்பவர்களை அகற்றும் பணி நேற்று நடைபெற்றது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் வீடுகளை அகற்றுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், வீடுகளை இடிக்கும் பணியினை கைவிட வேண்டும் என வலியுறுத்தி, பாட்டாளி மக்கள் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் கண்ணையன் என்பவர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து உயிரிழப்புக்கு முயன்றார். இதனால் அவரது உடல் முழுவதும் தீக்காயங்கள் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் கண்ணையனை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
கண்ணையன் உடல் முழுவதும் எரிந்ததால், 90 சதவீதம் வரை தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், அவரது நிலமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிர் பிழைப்பது கடினம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.








