அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணையின் அறிக்கையை ஏற்கவும், நிராகரிக்கவும் ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது என லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொது ஊழியருக்கு எதிரான குற்றச்சாட்டுடன் புகார் வந்தால் அதை விசாரிக்க ஊழல் கண்காணிப்பு ஆணையருக்கு அதிகாரம் உள்ளது எனவும் லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்திருந்தது.
ஊழல் கண்காணிப்பு ஆணையர் என்பவர் விசாரணை அதிகாரி இல்லை. லஞ்ச ஒழிப்பு துறை அளிக்கும் அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும் வழக்கமான நடைமுறை மட்டுமே உள்ளது என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்தி புகாருக்கு எதிர்மறையான அறிக்கையை அளித்த பிறகு, அதை ஆராய தேவையில்லை எனவும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று காலை 10:30மணி அளவில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், எடப்பாடி பழனிசாமி மீதான வழக்கை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தார். 2018-ம் ஆண்டு ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது எனவும் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்தார்.