கலை இயக்குநர் சந்தானத்தின் மறைவுக்கு இயக்குநர் வசந்தபாலன் இரங்கல்

திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்(50). ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், இறுதிச்சுற்றி,…

திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் மாரடைப்பால் காலமானதை அடுத்து அவரது மறைவுக்கு திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல கலை இயக்குநராக பணியாற்றியவர் சந்தானம்(50). ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், இறுதிச்சுற்றி, சர்கார், தர்பார் உள்ளிட்ட ஹிட் படங்களின் கலை இயக்குநராக பணியாற்றி புகழ் பெற்றவர். நேற்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் வெயில், அங்காடித் தெரு, காவியத் தலைவன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வசந்தபாலன், சந்தானத்தின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்றிரவு திரைப்பட கலை இயக்குநர் சந்தானம் அவர்களின் மறைவு செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். காவியத்தலைவன் திரைப்படத்தில் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்தார்.

பழைய நாடக நடிகர் ஆர்.எஸ்.மனோகர் துவங்கி பல நாடகக் கம்பெனிகளில் ஏறி இறங்கி நாடகக் குழுவிற்கு தேவையான அத்தனை நாடகப் பொருட்கள், விளம்பர நோட்டீஸ்கள், திரைச் சீலைகளைச் சேகரித்து வந்தார். பீரியட் படம் என்பதால் பார்த்து பார்த்து அக்கறையுடன் வேலை செய்தார். காவியத்தலைவன் திரைப்படத்தை தமிழக அரசு விருதுக்கு அனுப்ப நான் சோம்பிக் கிடந்த போது அவரே விருப்பப்பட்டு அனைத்து வேலைகளையும் செய்து அனுப்பி வைத்தார்.

காவியத்தலைவன் திரைப்படத்திற்கு சிறந்த கலை இயக்குநர் விருது உட்பட 10 விருதுகள் கிடைத்தன. தமிழக அரசு விருதுடன் என் படப்பிடிப்பு தளத்திற்கு தேடி வந்து எனக்கு நன்றி கூறி ஆரத்தழுவி என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஆயிரத்தில் ஒருவன் உட்பட இயக்குநர் செல்வராகவனின் திரைப்படங்கள், இயக்குநர் முருகதாஸின் சமீபத்திய அத்தனை திரைப்படங்களிலும் கலை இயக்குநராக பணி புரிந்தவர். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.